சர்வதேச அரங்கில் மீண்டும் சிறிலங்கா தனிமைப்படுத்தப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“தற்போது உள்நாட்டு நெருக்கடி மாத்திரமின்றி சர்வதேச நாடுகளுடனான நெருக்கடிகளும் தோற்றம் பெற்றுள்ளன.
மீண்டும் எமது நாடு சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிழக்கு முனைய விவகாரத்தினால் 2022 இல் திருப்பி கொடுக்கப்படவிருந்த கடன் தொகையை இந்தியா உடனடியாக செலுத்தும்படி அறிவித்துள்ளது.
இவ்வாறிருக்க மறுபுறத்தில் சீன ஆதிக்கம் அதிகரித்துச் செல்கின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா மீது மனித உரிமை மீறல், இராணுவ ஆட்சி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே ஜனாதிபதியால் புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.