கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பாக, தொழில்நுட்ப குழுவின் மூலமே தீர்மானிக்கப்படும் என்று, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
தொற்றால் இறப்போரின் சடலங்களை புதைக்க அனுமதிக்கப்படும் என சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
இதுகுறித்த வர்த்தமானி அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என, எதிர்க்கட்சி உறுப்பினர் முஜுபூர் ரகுமான் இன்று சபையில் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, கொரோனா தொற்றால் இறப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சு என்ற விதத்தில் தம்மால் தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை எட்ட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப குழுவின் மூலமே இதுகுறித்து தீர்மானிக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், நாட்டின் பிரதமர் தீர்மானமொன்றை எட்டி, சபையில் அறிவித்த பின்னர், அதனை மாற்றியமைப்பது சரியானதாக இருக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
சுகாதார அமைச்சில் யார் இதனை முடக்குவது எனவும் கேள்வி எழுப்பிய அவர், அரசாங்கம் தேவையற்ற விதத்தில், நாட்டிற்குள் அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.