சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபகாலமாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் அதிகளவு பகிரப்பட்டு வரும் நிலையில், ராஜ்யசபாவில் இன்று சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,
“கீச்சகம், முகநூல், யூடியூப் மற்றும் லிங்க் டு இன் போன்ற சமூக ஊடகங்களுக்கு இந்தியாவில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
சமூக ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுகின்ற நிலையில், இந்திய அரசியலமைப்பை அவர்கள் பின்பற்ற வேண்டும்.
போலி செய்திகளை பரப்புவதற்கு சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.