கடல் சார் குற்றச்செயல்களை கண்காணிப்பதற்காக, சிறிலங்கா விமானப்படைக்கு, அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் இருந்து, இரண்டு அதிநவீன கண்காணிப்பு விமானங்கள் வாங்கப்படவுள்ளதாக, விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் வழியாக இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக, இந்த அதிநவீன, உயர்தொழில்நுட்ப கண்காணிப்பு விமானங்கள் பெறப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து இந்த விமானங்கள், கொடையாக பெறப்படவுள்ளதாகவும், இதுவரை நாட்டில் இல்லாத நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த விமானங்களில் இருக்கும் என்றும் சிறிலங்கா விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறிலங்கா விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்க, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளின் விமானப் படைத் தளபதிகள் கொழும்பு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளை பிரதான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் விமானப்படைத் தளபதிகளும், அமெரிக்காவின் பசுபிக் விமானப்படைத் தளபதியும் கொழும்புக்கு வரவுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.