சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கோரி அம்பாறை – பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் தொடங்கப்பட்ட சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கோரி யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாண்டிருப்பிலும், நேற்று சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கல்முனை மாநகரசபை உறுப்பினர் இராஜன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவி செல்வராணி, நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி, கல்முனை இளைஞர் சேனை அமைப்பின் பிரதிநிதி பிரதீபன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், நீதிமன்ற தடையுத்தரவை சிறிலங்கா காவல்துறையினர் வழங்கியதை அடுத்து, பெயரிடப்பட்டு கட்டளை பிறப்பிக்கப்பட்டவர்கள், அங்கிருந்து வெளியேற நேரிட்டது,
எனினும், இளைஞன் ஒருவர் தொடர்ந்தும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.