வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், இன்று காலை தொடக்கம், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை, மீள பெற்றுத் தருமாறு கோரி, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநரால், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன.
குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக, பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறும், நீண்டகாலமாக தொண்டு அடிப்படையில் மருத்துவமனைகளில் பணியாற்றிய தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக, கடற்த 7 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த அவர்களுக்கு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படாத நிலையில், இன்று தமது போராட்டத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.