மக்கள் சேவை எனக்கூறி சுயநல அபிவிருத்தியே குறிக்கோளாக இருப்பவர்களின் சித்தாந்தம் தூய்மையற்றது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாரம் ஒரு கேள்வி பதிலில், ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“உங்கள் கட்சிப் பதிவு பெற்றதாகப் பத்திரிகையில் செய்தி படித்தேன். உங்கள் கட்சி மற்றக் கட்சிகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?” என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள சி.வி.விக்கேஸ்வரன் , “எமது கட்சி இன்னமும் பதிவு பெறவில்லை. பதிவு பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
எமது தமிழ் மக்கள் கூட்டணியில் நாங்கள் எவருமே பாரிய புத்திசாலிகள், கெட்டிக்காரர்கள், திறமைசாலிகள் என்று பெயர் எடுத்தவர்கள் அல்லர். நாங்கள் மிகச் சாதாரணமானவர்கள். அரசியலுக்குப் புதியவர்கள்.
எங்களுக்கிருக்கும் ஒரேயொரு பொதுக் குணாதிசயம், நாங்கள் எங்கள் மக்கள் மீது அன்பு கொண்டிருக்கின்றோம் என்பதாகும். அந்த அன்புதான் எங்கள் பலம்.
ஒரு மானிடரின் வாழ்வைப் பரிசீலித்துப் பார்த்தீர்களானால் அவரின் சிந்தனையில் இருந்து சித்தாந்தம் வரையிலான அவரின் வாழ்வுமுறையே வாழ்க்கை என்று குறிப்பிடப்படுகின்றது.
சிந்தனையில் இருந்து பிறப்பது சொல். சொல்லில் இருந்து பிறப்பது செயல். ஒருவரின் சிந்தனை, சொல் மற்றும் செயல்களின் வாயிலாக அவர் பிரதிபலிப்பதுதான் அவரின் சித்தாந்தம். இதிலே வழி நெடுகலும் தூய்மை வேண்டும்.
சிந்தனையில் தூய்மை, சொல்லில் தூய்மை, செயலில் தூய்மை என வாழ்ந்தால் எமது சித்தாந்தமும் தூய்மை பெறும். அதை விட்டு அசிங்கமான சிந்தனைகளோ, சொற்களோ அல்லது செயல்களோ எம்மைப் பீடித்துக் கொண்டால் எமது வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும்.
அரசியல் என்பது குறிக்கோள்களைக் கொண்டது. ஆகவே, சித்தாந்தத்தை மையமாக வைத்தே அரசியல் நடைபெறுகின்றது, நடைபெற வேண்டும்.
எமது கட்சியின் சித்தாந்தம் என்ன என்று கேட்டால் மக்கள் சேவையாகும். எல்லோரும் மக்கள் சேவை செய்கின்றோம் என்று தானே கூறுகின்றார்கள் என்று கேள்வி கேட்பீர்கள். இங்குதான் தூய்மை என்பது அவசியம். மக்கள் சேவை எனக்கூறி சுயநல அபிவிருத்தியே குறிக்கோளாக இருப்பவர்களின் சித்தாந்தம் தூய்மையற்றது என்று கூறியுள்ளார்