ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கான இறுதி இலக்கினை எட்டுவதற்கான முக்கிய பங்காற்றும் என்று சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து வெளியாகும் தேசிய தமிழ்ப் பத்திரிகையுடனான மின்னஞ்சல் தொடர்பாடலின் போதே பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
நல்லிணக்கத்தை அடைவதற்கும், நீதியினைப் பெற்றுக்கொள்வதற்கும், அதேபோன்று உண்மையினைக் கண்டறிவதற்குமான சிறந்த வழியாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்ற கட்டமைப்பு என்பதே சரியான வழியாக இருக்குமென 2020 பெப்ரவரி, ஜுன், செப்டம்பர், ஆகிய மாதங்களில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட எமது அறிக்கைகளில் இணை அனுசரணை வழங்கும் குழுவானது மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
உள்ளுரில் வினைத்திறன் மிக்க பொறிமுறைகள் தோற்றம் பெறாதிருக்கும் நிலையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதலை அடைவதற்கான இறுதி வழிமுறையை எட்டுவதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது தொடர்ந்தும் மிக முக்கியமான பங்கினைக் கொண்டிருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை தொடர்ந்தும் வைத்திருத்தல், இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாடு மீதான சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனத்தினை சமிக்ஞையிடுதல், ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தி தொடர்ச்சியான அறிக்கையிடலை மேற்கொள்வதற்கும் சாட்சியங்களை சேகரித்து பேணுதல், ஆகிய விடயங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினை கோருவதற்கான புதிய தீர்மானமொன்றிற்கு ஆதரவினைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் மிகவும் கடினமாக செயற்பட்டு வருகின்றோம்.
இதுவரையிலான பொறுப்புக்கூறும் கடப்பாட்டின் பலாபலன்களை பாதுகாப்பதற்கு இது மிகவும் முக்கியமானதாகும் என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடப்பட்டுள்ளது.