கிளிநொச்சி – பளை, இத்தாவில் பகுதியில் நேற்று இரவு, 9 மணியளவில் மகிழுந்து மீது, பாரஊர்தி மோதிய விபத்தில் தந்தையும், இரண்டு மகன்களுமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த மகிழுந்து மீது, எதிரே வந்த பாரஊர்தி மோதியதாகவும், இந்த விபத்தில் மகிழுந்தில் பயணம் செய்த 11 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் கூறப்படுகிறது.
உயிரிழந்த சிறுவர்களின் தந்தை, படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமானார்.
இந்த விபத்தில் பளை, தர்மங்கேணியை சேர்ந்த 38 வயதுடைய அழகரத்தினம் சற்குணம் என்ற தந்தையும், அவரது மகன்களான சாரங்கன் மற்றும் சானுஜன் ஆகியோருமே உயிரிழந்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய பாரஊர்தி சாரதி தப்பிச் சென்றுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.