இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய சிறிலங்கா மற்றும் இந்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“சிறிலங்கா கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் 54 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் இரண்டு நாட்களில் படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களின் விடுதலைக்காக இந்திய தூதரகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த மீனவர்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்தமை பாராட்டத்தக்கது.
ஆனால் சிறிலங்கா மீனவர்கள் எல்லை தாண்டி குற்றச்சாட்டில் பிடிபட்டு இந்திய சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை விடுதலை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கமும், இந்தியாவில் இருக்கின்ற சிறிலங்கா தூதரகமும் முயற்சிகளை மேற்கொண்டு உடனடியாக விடுதலை செய்கின்றனர்.
தமிழர்கள் எல்லை தாண்டி பிடிபடும் பட்சத்தில் அவர்களையும், அவர்களின் மீன் பிடி உடமைகளையும் விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் எல்லை தாண்டி பிடிபடும் பட்சத்தில் அவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.