சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்வதை இடைநிறுத்துமாறு தமக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா, சிறிலங்கா கடற்பரப்பில் அனுமதியின்றி நுழையும் எந்தப் படகையும், கடற்படையினர் கைப்பற்றுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்வதை இடைநிறுத்துமாறு கொள்கை ரீதியான முடிவு ஏதும் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், அவ்வாறான எந்த தகவலும் தமக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் ஐந்து படகுகளுடன் 54 இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் கைப்பற்றிய போதும், உடனடியாக அவர்கள் விடுவிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்திய அரசின் அழுத்தங்களை அடுத்தே இந்திய மீனவர்கள் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.