யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது, மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 பேருக்கும், திருநெல்வேலி சந்தையில் பணியாற்றும், நல்லூர் பிரதேச சபை சுகாதாரத் தொழிலாளர்கள் மூவருக்கும், திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 7 பேரின் மாதிரிகள் நேற்று மீள் பரிசோதனை செய்யப்பட்ட போது, அவர்களில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகளிடம் முன்னெடுக்கப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தாதி ஒருவருக்கும், மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட மூவருக்கும், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கும் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், தொற்று இனங்காணப்பட்ட பொறியியலாளர் ஒருவரின், மனைவி மற்றும் பிள்ளைக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தலா ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.