ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு மியன்மார் நாட்டு மக்களால் ஈஸ்டர் முட்டை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு பல்வேறு வழிமுறைகளில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் ஈஸ்டர் என்றாலே வண்ணமயமான ‘ஈஸ்டர் முட்டைகள்’ தான் மிகப்பிரபலமாகக் காணப்படும்.
இந்த நிலையில் மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் அந்த நாட்டு மக்கள், ‘ஈஸ்டர் முட்டை’ போராட்டத்தை முன்னெடுத்தனர்.
முட்டைகள் மீது ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான படங்கள் மற்றும் வசனங்களை வரைந்து போராட்டக்காரர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக யாங்கூன், மாண்டலே ஆகிய நகரங்களில் ஈஸ்டர் முட்டைகளை கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.