கனடியத் தமிழர் சமூகம், கனடியத் தமிழ் மாணவர் சமூகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தாயகத்தில் நடைபெறும் பொத்துவிலிருந்து பொலிகண்டி வரையிலான நடைபேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் தமிழின அழிப்பையும், ஆக்கிரமிப்பையும் சுட்டிக்காட்டும் வகையிலும் பார ஊர்தி அணிவகுப்பு பேரணி இன்று நடைபெற்றது.
தமிழ் இனஅழிப்பை தொடரும் இனவாத சிறிலங்கா அரசின் முன்னெடுப்பில் சுதந்திர நாளை பெப்ரவரி 4 இல் கொண்டாடும் அதேநாளில் உலகெங்கும் வாழும் தமிழீழ தேசிய மக்கள் ஆண்டு தோறும் அதேநாளை துக்க நாளாக நினைவு கூறுவது வழக்கம்.
அதற்கு அமைவாக முற்பகல் 10 மணிக்கு மார்க்கத்தில் ஆரம்பமான இந்தப் போராட்டம் ஜங் சந்திப்பை அடைந்து அங்கிருந்து ரொண்டோவில் உள்ள சிறிலங்கா துணை தூரகத்தினை நோக்கிச் சென்றிருந்தது. சிறிலங்கா துணை தூதரகத்தின் முன்னாள் பேரணி நிறுத்தப்பட்டு ‘சிறிலங்கா சுதந்திரதினம் ஈழத்தமிழினம் ஆக்கிரமிக்கப்பட்ட நாள்’ என்ற வாசங்கள் அடங்கிய இரண்டு கறுப்புக் கொடிகள் தூதரகத்தில் நாட்டப்பட்டது.
அதனையடுத்து ரொரண்டோ சட்டமன்றம் நோக்கி பேரணி சென்றதோடு அங்கிருந்து நகரின் பல பகுதிகளுக்கும் பேரணி சென்று கண்டன எதிர்ப்பினை பதிவு செய்திருந்தது.
இதேவேளை, கனடிய தமிழர் தேசிய அவையின் ஊடகப்பேச்சாளர் தேவா சபாபதி, சிறிலங்காவின் சுதந்திரதினம் ஈழத்தமிழினத்திற்கு கரிநாள் அது ஈழத்தமிழனம் ஆக்கியமிக்கப்பட்ட நாள் என்று கனடிய தமிழ் வானொலிக்கு கருத்து வெளியிடும் போது கூறினார்.
இந்த நாளில் ஈழத்தமிழன விடுதலைக்காவும், இனப்படுகொலைக்கான நீதிகோரியும் கனடிய அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளுக்கான கவனயீர்ப்பை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அந்த விதிமுறைகளை பின்பற்றி தாயக உறவுகளுக்கான விடிலுக்காக பலர் அணிதிரண்டுடிருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.