அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்று சீனா தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது சீன வர்த்தக துணை அமைச்சர் வொங் ஷுவென் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீனா தயாராகவுள்ளது என்ற போதிலும் இரண்டு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சமமாகவும், மரியாதையுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா பாரியளவிலான வர்த்தக கட்டுப்பாடுகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறான தருணத்தில் எவ்வாறு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்டீவன் முனிச், சீன அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் என்ற போதிலும், வரி விதிப்புகள் தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக விளங்குவதாகவே எண்ணத் தோன்றுகிறது என்றும் அவர் விபரித்துள்ளார்.
200 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீதான வரிகளை வோசிங்டன் நேற்று நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில் சீன வர்த்தக துணை அமைச்சர் வொங் ஷுவென் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.