மக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது நல்லாட்சி ஏற்பட்டுவிடும் என்று தற்போதய இல்ஙகை அரசு கனவு கண்டுகொண்டிருக்கின்றது எனவும், சனாதிபதியோ பிரதமரோ மக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சியே எனவும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கிற்கான இணைப்பாளர் ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை பத்திரிகையாளரை சந்தித்த அவர், தென்னிலங்கை மீனவர்களை வடக்கு கடலில் அனுமதித்ததன் மூலம் நல்லிணக்க அரசு இனங்களிடையே தேவையற்ற முரண்பாடுகளை தோற்றுவித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிலர் தெற்கு மீனவர்கள் வடக்கிற்கு வருவதை நியாயப்படுத்துகின்றனர் எனவும், தெற்கு சிங்கள மீனவர்கள் வடக்கிற்கு வருவதற்கு சிறிலங்கா இராணுவப் படைகள் பாதுகாப்பு கொடுக்கின்றன என்றும் தெரிவித்துள்ள அவர், ஆனால் வடக்கு மீனவர்கள் தெற்கு செல்லமுடியுமா எனவும், அவர்களிற்கு யார் கடலில் பாதுகாப்பு கொடுப்பார்களெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்னிலங்கை மீனவர்களை வடக்கில் அனுமதிப்பது தொடர்பில் வடக்கிலுள்ள மினவ அமைப்புக்களே முடிவெடுக்கவேண்டும் என்பதுடன், அவர்களே எவ்வளவு பேரை அனுமதிக்கலாமென தீர்மானிக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளுர் மீனவர்களால் மேற்கொள்ளப்படும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கூட கட்டுப்படுத்த முடியாது திணறிவரும் இலங்கை அரசு, எவ்வாறு இந்திய மீனவர்களது அத்துமீறலை தடுத்து நிறுத்துமென எதிர்பார்க்கலாமெனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சட்டவிரோத மீன்பிடியை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பெரும் முதலாளிகளிடம் கடலை தாரைவார்க்கும் அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், எதிர்வரும் 21ம் நாள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை கொழும்பில் முன்னெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்தப் போராட்டத்தில் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புக்கள் பங்கெடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.





