ஊடகவியலாளரான எக்னெலிகொட விடயத்தில் நீதி நிலை நாட்டப்படுமா என அவரின் மனைவி சந்தியா எக்னலிகொட கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கேள்வி எழுப்பியுளள அவர், மூத்த ஊடகவியலாளரும், கேலிச் சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வாளர்கள் பிணையில் விடுவிக்க ப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி தமது கவலையை வெளியிட்டுள்ளார்.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு பிரிவினைச் சேர்ந்தவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி வைத்தியசாலையில் தங்கியிருந்தனர் என்றும், ஆனால் பிணையில் விடுதலையான பின்னர் அவர்கள் கடமைக்கு திரும்பியுள்ளனர் என்றும் அவர் விபரித்துள்ளார்.
இத்தகைய சந்தர்ப்பத்திலேயே இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகம் ஏற்படுவதாகவும், இது தொடர்பில் சனாதிபதிக்கு தெளிவு படுத்துவதற்கான உரிமை தனக்கு இருப்பதாகவே உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனாதிபதி தேர்தலில் அனோமா பொன்சேகா, ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் சந்தியா எக்னெலிகொட ஆகிய மூன்று பெண்களின் பெயர்களை பயன்படுத்தியே மைதிரிபால சிறிசேன வெற்றி பெற்றிருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நீதி கட்டமைப்பு ஊடாக அனோமா பொன்சேகா, ஹிருணிகா பிரேமசந்திர ஆகியோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ள போதிலும், தனது கணவர் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.





