தமிழின படுகொலைக்கு நீதி கோரியும், சிறிலங்கா அரசாங்கத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறும் தாயக, புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு சமாந்தமாக கனடிய மண்ணில் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டத்தின் ஆறாம் நாள் இன்றாகும்.
இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு கனடா தமிழ் மகளிர் அமைப்பின் அனுரசணையுடன் கனடியத் தமிழர் சமூகமும் கனடியத் தமிழர் மாணவர் சமூகமும் ஒன்றிணைந்து பாரிய வாகனப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
திட்டமிட்டபடி முற்பகல் 11 மணிக்கு பிரம்டன் Shoppers World இல் ஒன்றுகூடிய வாகனங்கள், அங்கிருந்து புறப்பட்டு MARKHAM & STEELES இல் கூடிய நூற்றுக்கணக்கான வானங்களுடன் இணைந்து குயின்ஸ் பார்க் நோக்கி புறப்பட்டன.
பேரணியில் தமிழின அழிப்புக்கு நீதிகோரும் வகையில் பாரிய பதாகைகளை தாங்கிய பார ஊர்திகளும் பங்கேற்றன. குறிப்பாக ‘தமிழின இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்’ என்ற கோசத்துடனான பாரிய பாதாகையை தங்கிய வெள்ளை நிற பார ஊர்த்தி முன்செல்ல ஏனைய வாகனங்கள் அதன் பின்னால் அணி வகுத்துச் சென்றன.
அத்துடன் அனைத்து வாகனங்களும் தமிழீழ தேசியக் கொடியையும், சிவப்பு மஞ்சள் கொடிகளையும் தாங்கியதோடு தாயக உறவுகளின் உரிமைகளை வலியுறுத்தியும், இன அழிப்பிற்கு நீதிகோரியும் பல்வேறு வாசகங்களை தாங்கியிருந்தன.
பிற்பகல் நான்கு மணி அளவில் குயின்ஸ் பார்க்கில் உள்ள ஒன்ராரியோ சட்டமன்றத்தினை பேரணி அடைந்திருந்தது. இதன்போது எதியோப்பிய நாட்டவர்களும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகோரி சிவப்பு மஞ்சள் பலூன்களை தாங்கியவாறு ஒன்று கூடியிருந்தனர்.
இந்நிலையில், வாகனப்பேரணி மூன்று தடவைகள் ஒன்ராரியோ சட்டமன்றத்தினை வட்டமிட்டு நிறைவுக்கு வந்திருந்தது.
இதேவேளை, நாளைதினம் ஒட்டோவா நாடாளுமன்ற முன்றலிலும், ஒன்ராரியோ, அல்போர்ட்டா, கியூபெக், வின்னிபெக் நாடாளுமன்ற முன்றலிலும் ஏக நேரத்தில் கவனயீர்ப்பு பேரணி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








