மட்டக்களப்பு பெரிய புல்லுமலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் குடிதண்ணீர் தொழிற்சாலையை மூடுமாறுகோரி நாளை வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், இந்தப் போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஏறாவூர்ப்பற்று – பெரியபுல்லுமலைப் பிரதேசத்தில் நிலக்கீழ் தண்ணீர், குளங்கள், உன்னிச்சை நீர்ப்பாசனத்திட்டம் போன்றவற்றின் மூலம் நீரைப்பெற்று, அந்தத்தண்ணீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் தண்ணீர்த் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது.
நூற்றுக்கணக்கான நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள இந்த குடிநீர் தொழிற்சாலையால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர்ப்பற்றாக்குறையாக காணப்படும் இப்பகுதிகளில் காணப்படும் சிறியளவு நீரையும் பெற்று, இவ்வாறு தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளதனால், தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாகப் பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை இந்த குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இத்தொழிற்சாலை பற்றி தகவல் கோரப்பட்டதில், 83 கிராமங்கள், 11 கிராமசேவகர் பிரிவுகள், 4500இற்கு மேற்பட்ட குடும்பங்கள், 15,500இற்கு மேற்பட்ட மக்கள் பாரியளவில் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை குறித்த தொழிற்சாலையின் தொடர்ச்சியாக நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும், இந்தத்தொழிற்சாலை
நிர்மாணிக்கப்படுவதால் அங்கு விவசாயம், விலங்கு வேளாண்மை மற்றும் மக்களின் குடிநீர் தேவை நேரடியாக பாதிப்புக்குள்ளாகும் நிலமை ஏற்படும் என்றும் தமிழ் தேசிய முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.
நாளை மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன், தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் அன்றையநாள் வீட்டுக்குள் முடங்கியவாறு அகிம்சை வழியில் எமது எதிர்பை தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.





