“வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும்” என்று முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். எனினும் இன்று வாசிப்பு பழக்கமானது மிகவும் அருகி வருகின்றது.
இதற்கு நேரம் இல்லை என்பதை விடவும் சோம்பல் தன்மையே முக்கிய காரணமாக திகழ்கின்றது.
இப்படியிருக்கையில் எந்திரன் ரஜினி போன்று மூடியிருக்கும் புத்தகத்தை சில நொடிகளில் ஸ்கான் செய்துவிட தான் அனேகமானவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இது கூட சாத்தியமாகிவிடும் போல்தான் இருக்கின்றது.
ஆம், Georgia Institute of Technology மற்றும் Massachusetts Institute of Technology (MIT) ஆகிய நிறுவன ஆராய்ச்சியாளர்களின் முயற்சியில் மூடியிருக்கும் புத்தகத்தை வாசிக்கும் சாத்தியத்தை தரக்கூடிய தொழில்நுட்பம் பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி Terahertz எனும் கதிர்ப்பு (Radiation) தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட புத்தகங்களை இவ்வாறு வாசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஆய்வு ஆரம்ப கட்டத்திலேயே தற்போது காணப்படுவதனால் 9 தாள்களைக் கொண்ட புத்தகம் அல்லது ஒரு புத்தகத்தின் 9வது பக்கம் வரையே வாசிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.