இலங்கையில் சனநாயகம் நிலைபெற வேண்டுமாக இருந்தால் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை திருகோணமலையில் சனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய சுற்றுச்சூழல் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் சனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் பிரச்சினைகளை தீர்ப்பதில் மிகவும் நிதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர் என்றும், அதற்கு உரிய பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமது ஆட்சிக் காலத்துக்குள் நாட்டில் நிலையான சனநாயகத்தை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஏற்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பதவி ஏற்ற பின்பு சனாதிபதி சுற்றாடலில் அதிக கவனம் செலுத்தி வருவதனை அனைவரும் அறிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட இரா.சம்பந்தன், தமது காலப்பகுதியில் பல்வேறு விடயங்களை செய்வதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம், கலாசாரம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, நல்லிணக்கம், புரிந்துணர்வு வெவ்வேறு மக்கள் மத்தியில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் சனாதிபதி முறைமையை ஒழிக்கவும் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என்றும் அவர் விபரித்துள்ளார்.
இலங்கையில் சர்வாதிகாரத்தை இல்லாமல் செய்வது, சனநாயகத்துக்கு உரிய இடத்தைக்கொடுப்பது போன்ற பல்வேறு கருமங்களில் அவரது அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்றும் எதிர்கட்சித் தலைவர் விபரித்துள்ளார்.
சனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்று கூறுகின்றபோது, தனக்குள்ள அதிகாரங்களை விட்டுவிடத் தயாராக இருப்பதனை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெள்ளத் தெளிவாக கூறுவவதாகவும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.