சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளிப் பண்டிகையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நகர்வின் வெளிப்பாடே இத்தகைய தேசிய பண்டிகை எனவும், இதனை தாங்கள் நல்லுள்ளத்துடன் வரவேற்பதாகவும் அவர் குறி்பிட்டுள்ளார்.
தற்போதைய நல்லாட்சியில் எம்மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருப்பதாகவும், அடுத்தமுறை தீபாவளிக்கிடையில் இந்த வெளிச்சம் நிரந்தரமானதாக அமையுமென்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்பார்ப்பு கூடிய சீக்கிரம் நிறைவேறும் என்ற நம்பிக்கை தமக்கும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னராக கருத்து வெளியிட்டிருந்த இரா சம்பந்தன், 2016ஆம் ஆண்டிற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொள்ளப்படும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.