இலங்கையில் செயற்படும் மனித உரிமை அமைப்புக்களும் அரசசார்பற்ற அமைப்புக்களும் சந்தேகநபர்களினதும், குற்றவாளிகளினதும் உரிமைகளையே பாதுகாத்ததாக இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்வாறான அமைப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க தவறிவிட்டன என்றும், இலங்கையில் ஒரு அரச சார்ப்பற்ற நிறுவனம் கூட பாதிக்கப்பட்டவர்களை கவனித்ததில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
சந்தேகநபர்களை பற்றியும் கைதிகளை பற்றியுமே ஒவ்வொருவரும் பேசுகின்றனரே தவிர, பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது மற்றும் சாட்சிகளை காப்பாற்றுவது தொடர்பில் யாரும் பேசுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே சட்டத்தின்பால் நம்பிக்கையில்லாத பாதிக்கப்பட்டவர், தமது கைகளில் சட்டங்களை எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாப்பதற்கான சிறப்புப் பிரிவொன்று இன்று இலங்கை காவல்த்துறையினரால் அறிமுகபடுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.