இந்த ஆண்டு மாவீரர் நாள் நினைவுகூரல்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது, உளவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வரவேற்கத்தக்கது என்று உளவியல் மருத்துவ நிபுணர் பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து உயிரிழந்தவர்களை, அவர்களுடைய குடும்ப உறவினர்கள் மாவீரர் நாளின்போது பொது இடங்களில் ஒன்று கூடி நினைவு கூருவதற்கு கடந்த எட்டு ஆண்டுகளாக அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
மாவீரர்களின் வித்துடல்களை விதைப்பதற்காக வடக்கிலும் கிழக்கிலும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவத்தினர் அழித்து, அவற்றில் சில இடங்களில் தமது படை முகாம்களையும் அமைத்துள்ளனர்.
அரசாங்கத்தினால் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூர்வதென்பது விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கை என்று கூறிவரந்த அரசாங்கத் தரப்பு, மாவீரர்களை பொது இடங்களாயினும் சரி, மாவீரர் துயிலும் இல்லங்களாயினும் சரி நினைவு கூர்வதற்கு அனுமதி கிடையாது என்று இறுக்கமான தடையினை விதித்திருந்தது.
இதனை மீறிச் செயற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சமப்வங்களும் இடம்பெற்றிருந்தன.
இவ்வாறான நிலையிலேயே இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாகியதன் பின்னர், முதற் தடவையாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இம்முறை மாவீரர் நாளை மாவீரர் துயிலும் இல்லங்களிலும் பொது இடங்களிலும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடி சுடர்கள் ஏற்றி உணர்வு பூர்வமாக நினைவுகூர்ந்துள்ளனர்.
இந்தத் திடீர் மாற்றம் குறித்து கருத்து வெளியிட்ட பேராசிரியர் தயா சோமசுந்தரம், இது வரவேற்கத்தக்க முன்னேற்றகரமான ஒரு மாற்றம் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் நிலையான சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலைமாறு கால நீதிக்கான செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு, இந்த நினைவுகூரலுக்கான அனுமதி அரசியல் ரீதியாகப் பயனுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மாவீரர் நாளை கட்டுப்பாடுகள் ஏதுமின்றி மக்கள் தமது கலாசாரம் பண்பாட்டு விழுமியங்களுக்கு ஏற்றவாறு தமக்குப் பொருத்தமான முறையில் அனுமதியளிக்கப்படுவது முக்கியம் என்றும் பேராசிரியர் தயா சோமசுந்தரம் மேலும் தெரிவித்துள்ளார்.