துருக்கியின் சனாதிபதியை அவமதித்த குற்றத்தின் பெயரில் கனேடிய பெண் ஒருவர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது முகநூலில் தெரிவித்த கருத்தின் மூலமாகவே துருக்கி சனாதிபதியை அவமதித்ததாக கனடாவைச் சேர்நத 50 வயதான ஈஸ் ஹப்பர்(Ece Heper) என்பவர் கடந்த 30ஆம் நாள் கைது செய்யப்பட்டதாக, அவரின் வழக்கறிஞர் இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.
கனேடிய துருக்கிய இரட்டைக் குடியுரிமை பெற்றவரான ஈஸ் ஹப்பர் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து துருக்கியில் இருந்து வந்ததாகவும், அவர் வெளிப்படையாக கருத்துக்களை முன்வைப்பவர் என்ற போதிலும், துருக்கியில் தற்போது அரசாங்கத்தினை விமர்சிக்கும் நடவடிக்கைகள் பரவலாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கனடாவில் உள்ள ஈஸ் ஹப்பரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈஸ் ஹப்பர் கடந்த 28ஆம் நாள் வெளியிட்டுள்ள தனது முகநூல் பதிவில், ஊடகவியலாளர்களை துருக்கிய சனாதிபதி சிறைகளில் அடைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், ஐ.எஸ் அமைப்புக்க துருக்கி ஆதரவளித்து வருவதற்கான ஆதாரங்களும் உள்ளதாக தெரிவித்துள்ளாக கூறப்படுகிறது.
இதேவேளை கனேடியர் ஒருவர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளதான இந்த தகவலை தாமும் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள கனேடிய வெளியுறவுத் திணைக்களம், அவருக்கான தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ள போதிலும், அந்தரங்கப் பாதுகாப்ப சட்டங்கள் காரணமாக மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளது.
ஈஸ் ஹப்பர் ரொரன்ரோவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் வடகிழக்கே உள்ள நோர்வூட் பகுதியில் வசித்து வருவதாகவும், அங்கு தன்னுடன் துருக்கியில் இருந்து காப்பாற்றி மீட்கப்பட்ட ஐந்து நாய்களையும் அவர் தனது பிள்ளைகள் போல பேணிக் காத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுவேளை துருக்கியில் இவ்வாறு அரசுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்படும் நடவடிக்கைகள் தற்போது வழக்கமான சம்பவமாக உள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் அவரின் நண்பர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.