ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலையினை நேரில் கண்டதாக பன்னிரண்டு வயது சிறுவன் காவல்துறையிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
ஊர்காவற்துறை கரம்பெண் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் ஞானசேகரன் ஹம்சிகா எனும் ஏழு மாத கர்ப்பிணி பெண் இன்று முற்பகல் அடித்தும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு பகுதியை சேர்ந்த இந்த இளம் குடும்பத்தினரில், கணவர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றி வருவதனால் , ஊர்காவற்துறை பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் பிள்ளையும் உள்ளது.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இன்றைய நாள் செவ்வாய்க்கிழமை வழமை போன்று மனைவி , பிள்ளைகளை வீட்டில் விட்டு விட்டு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றுக்கு கடமைக்கு சென்றுள்ளார்.
மனைவி கர்ப்பிணியாக இருப்பதனால் , மதிய வேளைகளில் மனைவியுடன் தொலைபேசியில் உரையாடுவதனை வழக்கமாக கொண்டுள்ள இவர், அவ்வாறே இன்றைய நாளும் மனைவிக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய வேளை, தொலைபேசிக்கு பதில் இல்லாததால் அயலவர்களுடன் தொடர்பு கொண்டு மனைவி குறித்து விசாரித்துள்ளார்.
அதனை அடுத்து அயலவர் வீட்டுக்கு சென்று பார்த்த வேளை அவரது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளதாகவும், அதனை கண்ணுற்ற அயலவர்கள் உடனடியாக கணவருக்கு அறிவித்ததுடன் காவல்த்துறைக்கும் தகவல்கள் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணை படுகொலை செய்த கொலையாளிகள் , பெண்ணின் தலையின் பின்புறத்தில் கட்டையால் பலமாக அடித்துள்ளதுடன் கழுத்து பகுதியில் வெட்டியும் உள்ளதாகவும், பெண்ணை படுகொலை செய்யத பின்னர், தடயங்களை அழிக்கும் நோக்குடன் கொலையாளிகள் செயற்பட்டுள்ளதாகவும், இரத்தகறைகளை கழுவிய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொலையாளிகள் என சந்தேகிக்கபப்டும் நபர்கள் அப்பகுதியில் இரும்பு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் என்று அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டதனை அடுத்து காவல்துறையினர் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
ஊர்காவற்துறை – யாழ்ப்பாண வீதியில் மண்டைதீவு சந்தியில் உள்ள காவல்துறை காவலரணில் வைத்து ஊர்காவற்துறையில் இருந்து யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியினை வழிமறித்து சோதனை நடாத்திய போது, முச்சக்கர வண்டியில் இருந்த ஒருவரினது ஆடையில் இரத்த கறை காணப்பட்டதுடன், அவரது கழுத்து பகுதியிலும் காயம் காணப்பட்டதனை அடுத்து, இருவரையும் கைது செய்த ஊர்காவற்துறை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அதன் போது ஊர்காவற்துறை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஊரவர்கள் கொலை சந்தேகநபர்களை தாக்க முற்பட்டதனை அடுத்து சந்தேகநபர்களின் பாதுகாப்பு கருதி , சந்தேகநபர்களை யாழ்.காவல் நிலையத்திற்கு மாற்றுவதற்கு ஊர்காவற்துறை காவல்துறையினர் முயற்சிகளை எடுத்த வேளை அதற்கு ஊரவர்கள் சம்மதிக்காததால் பதட்டம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் ஊரவர்களுடன் சமரசம் பேசி சந்தேகநபர்களை யாழ்.காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில், யாழ்.காவல் நிலையத்தில் வைத்து ஊர்காவற்துறை காவல்துறையினர் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேக நபர்களை புதன்கிழமை காலை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை இந்த படுகொலை சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும், சந்தேக நபர்களை அடையாளம் காட்ட முடியும் எனவும் பன்னிரண்டு வயது வாய் பேச முடியாத சிறுவன் ஒருவன் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுவனின் தகவலின் பிரகாரமும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த படுகொலை சம்பவத்துடன் இருவர் மாத்திரம் தான் தொடர்பா அல்லது வேறு நபர்களின் தொடர்பும் இருக்கின்றதா எனும் கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், தொடர்பு இருப்பின் அவர்களை கைது செய்வதற்காக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் காவல்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யபப்ட்ட இரண்டு சந்தேக நபர்களும் சுழிபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.