வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று மாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று(திங்கட்கிழமை) யாழில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மே மாதம் 12 முதல் 18 வரை இனப்படுகொலை வாரமாக அனுஷ்டிப்பதுடன் அந்த வாரத்தில் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவிருந்த அரச தலைவரிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கடந்த மே மாதம் 08ஆம் திகதி யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பில் தென்பகுதியில் சில அமைப்புக்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அவருக்கு கடந்த வாரம் அழைப்பு விடுக்கப்பட்டது ஆனாலும் அதை அவர் மறுத்ததுடன் யாழ்ப்பாணத்தில் வந்து விசாரணை மேற்கொள்ளுமாறும் கோரியிருந்தார்.
இந்நிலையில் இன்று கொழும்பிலிருந்து யாழ். சென்ற விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் திட்டமிடப்பட்ட குற்றங்களை விசாரிக்கும் பிரிவினர் யாழ் பொலிஸ் நிலையத்திலுள்ள குற்றத்தடுதடுப்பு பிரிவிற்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் குறித்த ஊடக சந்திப்பில் அவருடன் கலந்து கொண்டிருந்த சக மாகாணசபை உறுப்பினர்களான கிளிநொச்சி மாவட்ட மாகாணசபை ஊறுப்பினர் பசுபதிப்பிள்ளை மற்றும் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் தியாகராஜா ஆகியோரும் இன்றையதினம் அழைக்கப்பட்டு அவர்களிடமும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.