கனடாவின் குற்றவியல் சட்டத்தினை நவீனமயப்படுத்துவதன் மூலம், நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமாவதனை தடுத்து, விசாரணைகளை விரைவுபடுத்த முடியும் என்று கியூபெக்கின் நீதி அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.
கனடாவின் மத்திய மற்று்ம் மாநில நீதி அமைச்சர்களுக்கிடையேயான இரண்டநாள் மாநாடு வன்கூவரில் நடைபெறும் நிலையில், அதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களை குறைக்கும் வகையில், கனேடிய குற்றவியல் சட்டத்தினை திருத்தி அமைக்குமாறு தாமும், ஏனைய மாநில நிதி அமைச்சர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் குற்றவியல் சட்டத்தில் மேம்போக்கான மாற்றங்களை மட்டும் செய்யாமல், அடிப்படையிலிருந்தே அதனை நவீனமயப்படுத்தி திருத்தி அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொலைக் குற்றங்கள், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பெருமளவு சம்பவங்கள் தொடர்பிலான வழக்குள், நீண்டகாலமாக முடிவுக்கு கொண்டுவரப்படாது நிலுவையில் இருந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தும் வகையில் தமது மாநில அரசு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும், அதற்காக 135 மில்லியன் டொலர்களை முதலிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவற்றிற்கும் மேலாக குற்றவியல் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளும், வழக்குகள் தாமதமடைவதற்கு காரணமாக உள்ளதாகவும், அதனை திருத்தி அமைப்பதன் மூலமே நாடளாவிய ரீதியில் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளையும் , தீர்ப்பு வழங்குதலையும் விரைவுபடுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.