உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வலியுறுத்தி, நாளை பிற்பகல் 2.30 மணி முதல் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மனிதச் சங்கிலிப் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்துமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் வவுனியா மாவட்டச் செயலாளர் டோன்பொஸ்கோ இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகளை அடைவதற்குப் போராடியவர்களைப் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் அரசு வலியுறுத்திக் கொண்டே செல்கின்றது என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அந்தக் கோரிக்கையை முன்வைத்துப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யப்பட்ட போதிலும், புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அநீதியானதாகும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பல தடவைகள் ஆயுதம் தாங்கிப் போராடியவர்களை அரசு விடுதலை செய்து தேசிய நீரோட்டத்தில் இணைத்துள்ளது எனவும், கடந்த கால மகிந்த அரசாங்கம் போல நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதாக கூறி பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமும் இந்த அரசியற் கைதிகளை விடுதலை செய்வதை தொடர்ந்து மறுத்து வருகின்றது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக வவுனியா மேல் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த சந்தேகநபர்களுக்கெதிரான விசாரணைகள் அனுராதபுரம் நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டமை நீதித்துறை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளாக வட பகுதியிலும் இயல்பு வாழ்கை ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பலமாக உள்ளதாக கூறிவரும் அரசாங்கம், தற்போது எந்தவிதமான அச்சுறுத்தல்களோ, ஆயுதப் போராட்டஙங்களோ இல்லாத போதிலும், சட்டமா அதிபர் சாட்சிகளின் பாதுகாப்புக் கருதி அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறுவதன் மூலம், வட பகுதி பாதுகாப்பான பிரதேசமாக இல்லை, சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பை சரியாக மேற்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள் எனக் கூறுகின்றாரா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கை சனாதிபதியும், பிரதமரும் அண்மையில் வவுனியாவுக்கு வருகை தந்த போது பாதுகாப்பு பிரச்சினை ஏற்படவில்லையா என்பதை மக்களுக்கு சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சு என்போர் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும் எனவும், நாட்டின் பாதுகாப்புப் பற்றி சட்டமா அதிபர் ஏன் சந்தேகம் கொள்கிறார் என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அல்லது நீதிபதிகள் சரியான தீர்மானம் எடுக்க முடியாதவர்கள் என்று சட்டமா அதிபர் சந்தேகம் கொண்டுள்ளாரா என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, சட்டமா அதிபரின் செயற்பாடு நீதித்துறையின் செயற்பாடுகளிலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதுடன், இன நல்லிணக்கத்துக்கும் கேடு விளைவிப்பதாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.