நம்பிக்கையை குறையச் செய்யும் வகையிலேயே இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் அமைவதாக, மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் என்று தாம் நம்பியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசாங்கம், ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றும் என்று நம்பிக்கை வைத்திருந்ததாகவும், அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் அந்த நம்பிக்கையை தளரச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் அந்த நம்பிக்கையை தக்கவைக்க முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கண்டியில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், அந்த வன்முறைகளை மதகலவரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அது கிளர்ச்சி மற்றும் போர் அனுபவங்களை கொண்ட ஒரு சமூகத்தில் ஒரு மிருகத்தனமாக செயற்பாடு என்றும் விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் கண்டியில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் நாளை ஏனையவர்கள் சட்டத்தை தமது கைகளில் எடுக்கத் தயங்கமாட்டார்கள் என்றும் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார்.