சிரியாவின் டவுமா பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் சர்வதேச குழுவைச் சேர்ந்த ரசாயன ஆய்வாளர்கள் ஆய்வுப் பணி தாமதமாகியுள்ளது.
சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுதத் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
அதற்கு பதிலடியாக சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ராணுவ விமானங்கள் தலைநகர் டமாஸ்கஸில் குண்டுமழை பொழிந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் சிரியாவில் ரசாயனத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் டோமாவில் ஆய்வுச் செய்ய சர்வதேசக் குழுவைச் சேர்ந்த ரசாயன ஆய்வாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ரஷ்யாவும், சிரியாவும் கூறின.
இந்த நிலையில் டவுமாவில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் சர்வதேச குழுவின் ஆய்வு பணி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சிரியாவுக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவர் கூறும்போது “டவுமாவில் பாதுகாப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டை கருத்தில் கொண்டு சர்வதேச குழு இன்று (புதன்கிழமை) ஆய்வு செய்ய மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சுட்டுக்கான காரணம் இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை.