13 ஆண்டுகளின் பின் தந்தையின் இறுதிச் சடங்கில் தமிழ் அரசியல் கைதியொருவர் கலந்துகொள்ளச் சென்றுள்ளமை பலரது மனதையும் நெகிழவைத்துள்ளது.
நேற்று முன்தினம் இயற்கையெய்திய முனியப்பன் தங்கவேல் எனபவரின் தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு, அவரின் மகனான தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதிக்கு ஒரு மணிநேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட நிலையில், சிவகுமார் இன்று தனது தந்தையின் மரண சடங்கில் கலந்துகொண்டார்.
இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொள்வதற்காக அரசியல் கைதியான சிவகுமார் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்துச் செல்லப்பட்டார்.
2006ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 10ஆம் நாள் கொழும்பு கரந்தெனிய பகுதியில் வாகனத்துடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, 3 பிள்ளைகளின் தந்தையான தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 ஆண்டுகளாக சந்தேகநபராக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.
பொரள்ள பகுதியில் அமைந்துள்ள நியூ மகசின் சிறைச்சாலையில் அவர் அரசியல் கைதியாக உள்ளதாகவும், நீண்ட காலமாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பலப்பிட்டி உயர்நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாகவும் அவரது மனைவி சுமதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சிவகுமாருக்கு வழங்கப்பட்ட ஒரு மணிநேர காலம் நிறைவடைந்ததும் அவரை சிறைச்சாலை அதிகாரிகளை அழைத்து சென்றபோது உறவினர்களும், 13 ஆண்டுகளாக கணவன், தந்தையை பிரிந்திருந்த ஆதங்கத்தில் மனைவியும், பிள்ளைகளும் சிவகுமாரை தழுவி கண்ணீர் விட்டழும் காட்சிகள் கிளிநொச்சி மண்ணை மீண்டும் சோகத்தில் ஆழித்தியது.
சிவகுமதர் சிறைச்சாலை பேருந்தில் ஏறும் காட்சியை கண்ட பிள்ளைகள் கதறி அழுத நிலையில், சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சிவகுமரின் கண்களிலிருந்து நீர் வழிய அவர் பேருந்திலிருந்து கையசைத்த போது அவரது பிள்ளைகளும், உறவினர்களும் வேதனையில் துடித்த காட்சிகள் துக்கத்தை அதிகரித்தது.
தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கும் அப்பால், இவ்வாறு அரசியல் கைதிகளாக நூற்றுக்கும் மேற்பட்டோர், குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படாத நிலையில், ஆண்டுக் கணக்கில் சந்தேக நபர்களாவே சிறை வைக்கப்பட்டிருப்பதும், அவர்களது குடும்பத்தினர் மிகுந்த துயரில் வாழ்வதும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.