ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ராட் ஹுசைன் சொல்வதையெல்லாம் கேட்டு செயற்பட வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது எனவும், இலங்கைக்கு யாரும் கட்டளையிட முடியாது என்றும் இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் புதிய அரசமைப்பு உருவாக்குதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவகின்றன எனவும், இதனிடையே நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமையை இல்லாமற் செய்யவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பில் சுதந்திர கட்சியின் மத்திய மற்றும் செயற்குழுகள் கூடி இதுவரையில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாதென்பது தனது தனிப்பட்ட கருத்தாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், அமைச்சர் மங்கள சமரவீர, மரண தண்டனையை ஒருபோதும் இலங்கை நடைமுறைபடுத்தாது என்று உறுதியளித்திருந்த போதிலும், மீண்டும் மரணதண்டனையை நடைமுறைபடுத்தப்போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது எனவும், சனாதிபதியின் இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரமும் கிடைத்துள்ளது என்றும், அமைச்சர் மங்கள சமரவீர மாத்திரமல்லாது ஏனையோரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள போதிலும், தற்போது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதாகவும், தேவையேற்படின் இவைதொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் தெளிவுப்படுத்துவோம் என்றும் மகிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.