முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பெரும்பான்மையினரின் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புடனேயே, பெரும்பான்மையினரின் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும், மகாவலி நீரே வரமுடியாத பிரதேசங்கள் கூட, மகாவலி அபிவிருத்திச் சபைக்கு உள்ளிட்ட காணிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியு்ளார்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் பெரும்பான்மையின மீனவர்களை, அங்கு தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கான அரச உதவிகளும் இராணுவ ஆதரவுகளும் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகிறது என்றும், அவர்களுக்கான குடியிருப்புக் காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் இந்த வேலைத்திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் மக்களின் இருப்பைக் காப்பாற்றுவதற்காக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினூடாக வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போதிலும், இன்று பெரும்பான்மையினரின் குடியேற்றத்தினூடாக, வடக்கு – கிழக்கு நிலத்தொடர்பு துண்டிக்கப்படுவதாகவும், இந்த விடயம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.