சிரியாவில் போராளிகள் வசமுள்ள இட்லிப் பிராந்தியத்தில் சிரியா அரசு மற்றும் அதன் கூட்டாளிகளான ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியோர் பொறுப்பற்ற முறையில் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இட்லிப் பிராந்தியத்தில் நடந்திருப்பது ‘ஒரு மாபெரும் மனிதாபிமான தவறு’ என்று தனது கீச்சகப் பக்கத்தில் செய்தி வெளியிட்ட டொனால்ட் டிரம்ப், இந்த தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் போராளிகள் வசமுள்ள கடைசி பகுதியான இந்த பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த சிரியா அரசுப்படைகள் திட்டமிட்டு வருகின்றன.
சிரியா அரசுப்படைகளின் இந்த பதில் நடவடிக்கையால் பல ஆயிரக்கணக்கான குடிமக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகும் என்று ஐ.நா. அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
இட்லிப் பிராந்தியத்தில் நடந்து வரும் மோதலில் சிரியா அரசுப்படைகளோ அல்லது அதன் கூட்டாளிகளோ இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால், அதற்கு எதிராக அமெரிக்கா பதில் நடவடிக்கையில் இறங்கும் என்று திங்கள்கிழமையன்று அமெரிக்க அரசுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இவ்வாறான நிலையில் இட்லிப் பிராந்தியத்தில் எல்லோரின் பார்வையும் சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத், ரஷ்யா மற்றும் ஈரான் மீது உள்ளது என்று, ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தனது கீச்சகப் பதிவில் தெரிவித்துள்ளார்.





