வடபகுதிக்கு செல்லும் இலங்கை சனாதிபதியும், பிரதமரும் தன்னை இழிவுபடுத்தி வருவதாக முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்றையநாள் நடைபெற்ற சத்தியாக் கிரக போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் தான் ஈட்டிய வெற்றிகளினாலேயே இன்று பிரதமரும், சனாதிபதியும் வடக்கில் சென்று தன்னை இழிவுபடுத்துகின்றனர் எனவும், வடக்கிற்கு சென்று தன்னை கேவலப்படுத்துவதற்கான சூழ்நிலையை தானே உருவாக்கியிருக்கின்றேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல்களை ஒத்தி வைப்பதன் மூலம் மக்களின் சனநாயக உரிமைகள் முடக்கப்பட்டுள்ளன எனவும், நாடு சனநாயக ஆட்சியிலிருந்து எதேச்சாதிகாரம் நோக்கி நகர்கின்றது எனவும், எனவே புதிய அரசாங்கமொன்றை உருவாக்கி சனநாயகத்தை நிலைநாட்ட வேண்டியது தமது கடமையாகும் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று இரவுடன் முடிவுக்கு வந்துள்ள இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்கார்களில் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் மது அருந்தியதால் ஏற்பட்ட விளைவால் சுமார் 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 8 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.