அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்ததாகவும், தமது விடுதலையை முன் வைத்து அவர்கள் தொடர்ந்தும் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், தாங்கள் சென்ற போது அவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து தங்களை வந்து சந்தித்தார்கள் எனவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.
அவர்களுடைய உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றதை தாங்கள் அவதானித்ததாகவும், சக்தியை இழந்து மிகவும் வேதனைக்கு உள்ளானவர்களாக காணப்பட்டனர் எனவும், தமது விடுதலைக்கு முன் நின்று உழைக்குமாறும் தங்களிடத்தில் அவர்கள் கோரிக்கை விடுத்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் சுமார் 9 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், தற்போது பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தங்களை வந்து சந்தித்துள்ளதாகவும், தாங்கள் எவ்வித விசாரணைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இது வரை காலமும் தமக்கு எவ்வித விமோசனமும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகவீனம் அடைந்துள்ள போதும் அவர்களுக்கு கை விலங்கிடப்பட்டே வைத்திய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது எனவும், அதனை அவர்கள் துயரத்துடன் தங்களிடத்தில் தெரிவித்துள்ளனர் எனவும், தங்களை விடுதலை செய்யாது விட்டாலும், தங்களை புனர்வாழ்வுக்காவது அனுப்பும் படி கோரிக்கை விடுத்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் விடுதலைக்காக போராடுவதற்காகவோ அல்லது கேட்பதற்காகவோ யாரும் இல்லை என்ற ஆதங்கம் அவர்களிடத்தில் இருக்கின்றது எனவும், இவர்களின் விடுதலைக்காக அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று அனைவரிடமும் மன்னார் பிரஜைகள் குழுவின் சார்பாக வினயமாக கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அரசியல் பிரமுகர்களை அனுகி, அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இந்த நாட்டின் சனாதிபதியிடம் கோரிக்கை முன் வைக்க தீர்மானித்துள்ளதாகவும், இவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி புனர்வாழ்வு வழங்க வேண்டும் என்று அரசினையும் அதனை சார்ந்துள்ளோரிடமும் கோட்டு நிற்கின்றோம் என்றும் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் மேலும் தெரிவித்துள்ளார்.