அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனுராதபுர சிறைச்சாலையில் 11 அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதையும், தமது வாழ்வை தமிழ் மக்களுக்கு அர்ப்பணித்த அவர்கள் இன்று சிறையில் வாடுகின்றனர் என்பதையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், அவர்களுடைய விடுதலை தொடர்பில் தற்போதைய சனாதிபதி வாக்குறுதிகளை அள்ளி வழங்கி இருந்த போதிலும், மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் விடுதலை இல்லை எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இவர்கள் சாவைத் தழுவக் கூடாது எனவும், ஏனெனில் அவர்கள், தமிழர்கள் வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கேட்கிற போதிலும், அவர்களுக்கு மன்னிப்பு தேவையில்லை எனவும், அவர்களுக்கு நிபந்தனையற்ற விடுதலையையே கோருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர்க் குற்றம் என்பது இராணுவத்துடன் தொடர்புபட்டது எனவும், அதற்கு இராணுவ சட்டதிட்டங்களின் ஊடாகவோ, அனைத்துலக சட்டங்கள் கூடாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், அதனை விடுத்து போர்குற்றம் புரிந்தவர்களை அரசியல் கைதிகளோட ஒப்பிட வேண்டாம் என்றும் அருட்தந்தை சக்திவேல் மேலும் தெரிவித்துள்ளார்.