பிரித்தானியா, நாடுகளை அங்கீகரிக்குமே தவிர, அரசாங்கங்களை அங்கீகரிப்பதில்லை என்று ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் எமிலி தோர்ன்பெரி கடந்த திங்கட்கிழமை எழுப்பியிருந்த கேள்விக்குக் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையின் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பிய எமிலி தோர்ன்பெரி, இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்சவையா, ரணில் விக்கிரமசிங்கவையா பிரித்தானியா ஏற்றுக் கொள்கிறது என்று கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட், இலங்கைவின் அரசியல் நிலவரங்கள் மிகவும் கவலையளிக்கின்றன எனவும், நாடுகளை பிரித்தானியா அங்கீகரிக்குமே தவிர, அரசாங்கங்களை பிரித்தானியா அங்கீகரிப்பதில்லை என்று கூறியுள்ளார்.
அரசியலமைப்பு மதிக்கப்படுவதையும், அரசியல் மற்றும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்யுமாறு இலங்கையின் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகருடன் கலந்துரையாடி, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி, இலங்கை மக்களின் குரலை சனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வெளிப்படுத்த வாய்ப்பளிக்குமாறு, கடந்த ஒக்ரோபர் 29ஆம் நாள், இலங்கை அதிபரைக் கோரும் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.