தமிழ் மக்கள் தமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் உரிமைக்கு எதிராகத் தெற்கில் வெளியிடப்படும் கடும் எதிர்ப்பு தொடர்பில் அனைத்துலகம் புரிந்துகொள்ள வேண்டுமென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாள் தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், போரில் உயிர் நீத்த தமது பிள்ளைகளை தாய், தந்தையர் நினைவுகூர்ந்து அழுவதையோ, தமது உடன் பிறப்புக்களை சகோதரங்கள் நினைவு கூர்ந்து தேற்றிக்கொள்வதையோ கூட சகித்துக்கொள்ள முடியாத தெற்கின் மனோநிலையை அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக உயிர் நீத்த எமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் எமது மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாதென தான் உறுதியாக நம்புவதாகவும், அவ்வாறு எதிர்ப்பவர்கள், எம் மக்கள் மனதில் மேலும் மேலும் உறுதியையும் சுதந்திர தாகத்தினையும் மேலெழுச் செய்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவு கூருவது அவரவர் சார்ந்த சமூகங்களின் கடமையாகும் என்றும், இன்றைய மனித நாகரிகத்தின் முக்கியமான ஒரு பண்பாக இது காணப்படுகிறது என்றும், இதேவேளை முரண்பாடுகளுக்கான தீர்வு கோட்பாடுகளிலும் போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நினைவுகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் விபரித்துள்ளார்.
ஆகையால், அமைதியான வழியில் உரிய வழிமுறைகளை பின்பற்றி எமது மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.