இலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில 29 பேர் கொண்ட அமைச்சரவை இன்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஐக்கிய தேசிய முன்னணியின் இந்த அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
ஒக்டோபர் 26ஆம் நாள் ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்தை அடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தணிந்துள்ள நிலையில், தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
அந்த வகையில் ரணில் விக்ரமசிங்க தலைமை அமைச்சர் மற்றும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சித் திறன் அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சராகவும், ஜோன் அமரதுங்க சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சராகவும், காமினி ஜயவிக்ரம பெரேரா புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராகவும், மங்கள சமரவீர நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல லக்ஷமன் கிரியெல்ல அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராகவும், ரவூப் ஹக்கீம் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராகவும், திலக் மாரப்பன வெளிநாட்டலுவல்கள் அமைச்சராகவும், ராஜித சேனாரத்ன சுகாதார, போசணைகள் சுதேச மருத்துவத் துறை அமைச்சராகவும், ரவி கருணாநாயக்க மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சராகவும், வஜிர அபேவர்த்தன உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சராகவும், ரிஷாத் பதிறுதீன் கைத்தொழில், வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.
அவ்வாறே பாட்டலி சம்பிக்க ரணவக்க பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராகவும், நவீன் திசாநாயக்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராகவும், பீ ஹரிசன் விவசாயம், கிராமிய பொருளாதாரம், பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சராகவும், கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும், ரஞ்சித் மத்தும பண்டார பொதுநிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகவும், கயந்த கருணாதிலக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராகவும், சஜித் பிரேமதாச வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராகவும், அர்ஜுன ரணதுங்க போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல பழனி திகாம்பரம் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராகவும், சந்ராணி பண்டார மகளிர், சிறுவர் அலுவல்கள், உலர் வலய அபிவிருத்தி அமைச்சராகவும், தலதா அதுகோரள நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும், அகில விராஜ் காரியவசம் கல்வி அமைச்சராகவும், அப்துல் ஹலீம் முஹம்மட் ஹசீம் தபால் சேவைகள், முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சராகவும், சாகல ரத்நாயக்க துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சராகவும், ஹரீன் பெர்ணான்டோ தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும், மனோ கணேசன் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சராகவும், தயா கமகே தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும், மலிக் சமர விக்ரம அபிவிருத்தி மூலோபாயங்கள், அனைத்துலக வர்த்தகம், விஞ்ஞான, தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சராகவும்வும் நியமனம் பெற்றுள்ளனர்.