வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் சிங்கள பௌத்த கலாச்சாரத்தை பறைசாற்றும் சின்னங்கள் காணப்படுவதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய யாழ்ப்பாணம் வலி வடக்கில் காணிகள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு விடுக்கப்பட்ட காணிகளின் மதில்கள் மற்றும் சுவர்களிலும் பண்டைய சிங்கள மன்னர்களின் படங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணிகளில் பௌத்த மத வழிபாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு இப்பொழுது விடுவிக்கப்பட்ட காணிகளில் நிர்மானிக்கப்பட்டிருந்த கிணறுகளையும் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இலங்கைப் படையினர் இன்று 54 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளதாக வட மாகாண ஆளுனரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
40.74 ஏக்கர் அரச காணிகளையும், 13.64 ஏக்கர் பொதுமக்களின் காணிகளையும் விடுவிப்பதற்கான பத்திரத்தை வவுனியா மாவட்ட இராணுவ கட்டளைப் பீடத்தின் சார்பாக 56 ஆம் படையணியின் தளபதி வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவனிடம் இன்று ஆளுநர் அலுவலகத்தில் வைத்துக் கையளித்தார்.





