குளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’ செய்வதால் ஏற்படும் நன்மை : குளிக்கும் போது உடலுக்கு, ‘பிரஷ்’ பயன்படுத்தும் பழக்கம், பலருக்கும் இருக்கும். குளிப்பதற்கு முன், உடல் முழுவதும் மிருதுவாக பிரஷ் செய்து, பின் குளிக்க செல்லலாம். இதை, ‘டிரை பிரஷ்ஷிங்’ என்பர்.தோலில் சேரும் கொழுப்பால், பின்புறத்திலும், தொடையிலும் தடிப்பு போல ஒன்று ஏற்படும். இது, ‘செல்லுலைட்’ எனப்படும். இது, தோலில் அதிகமாகச் சேர்ந்தால், ஒவ்வாமை ஏற்பட்டு, கட்டிகளாக மாற வாய்ப்பிருக்கிறது.டிரை பிரஷ்ஷிங் செய்வதால், இந்த கட்டிகள் உருவாவது தடுக்கப்படுவதுடன், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் வரும்முன் தடுக்கலாம். அழுத்தமாக தேய்த்து குளிப்பதால், தோலில் காணப்படும் இறந்த செல்கள் முழுமையாக நீக்கப்படும். அதனால், அந்த இடத்தில் புதிய செல்கள் வேகமாக உருவாவதுடன், தோல் பொலிவடையும்; மிருதுவாகும்.தோலின் மேற்பரப்பில் சிறு சிறு நுண்ணிய துவாரங்கள் காணப்படும். அவை, ‘பாக்டீரியா’ தொற்றுகளால் அடைக்கப்பட்டிருந்தால், டிரை பிரஷ்ஷிங் செய்யும்போது, அந்த அடைப்பு நீங்கிவிடும். அதன் காரணமாக, தோல் தேவையான ஊட்டச்சத்தை சரியாக உட்கிரகித்து, ஆரோக்கியமாக மாறும்.தோலின் மீது அழுத்தம் கொடுத்து தேய்க்கும்போது, அடிப்பகுதியிலுள்ள நரம்புகள் அனைத்தும் அழுத்தம் பெறும். நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று, ரத்த ஓட்டம் சீராகும். அன்றைய தினத்தை புத்துணர்வுடன் கழிக்க, இது பெரிய அளவில் உதவும்.சிறுநீரகமும், தோலும் உடலின் நச்சுகளை வெளியேற்றுவதில் முக்கியப் பங்காற்றுபவை. அந்த வகையில், இரண்டு உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தோல் சுத்தமாக இருந்தால், சிறுநீரகத்தின் பணிச்சுமை குறைந்து, முன்பைவிட விரைவாகச் செயலாற்றத் துவங்கும்.