அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை இன்று தெரிவித்துள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான 2ஆவது உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.
இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறும்போது,“மிகவும் நல்ல மற்றும் ஆக்கப்பூர்வமான் சந்திப்பு இது. அணு ஆயுதங்களை அழித்தல், பொருளாதாரம் ஆகியவற்றை முன்னெடுக்கப் பல வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது” என்று கூறினார்.
”இந்த சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. ஆனால் இரு நாடுகளின் குழுக்களும் வரும் காலத்தில் சந்தித்துப் பேச எதிர்நோக்கி உள்ளன” என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்கள் முன்னிலையில், கூட்டறிக்கை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், சந்திப்பு நிறைவடைந்ததும், டிரம்ப் மற்றும் கிம் ஆகிய இருவரும் அந்த இடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றனர்.
கடந்த ஆண்டு உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன. எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. ஐநா சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக இருந்தன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.
இதையடுத்து மாதம் டிரம்ப் – கிம் ஆகியோருக்கு இடையிலான முதல் உச்சிமாநாடு சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.