வடகொரிய அதிபர் கிம் ஜாங் யங்கின் சகோதரர் கிம் ஜாங் நாம், கடந்த 2017ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார். விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற ரசாயன விஷப்பவுடரை வீசி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக இந்தோனேசியாவைச் சேர்ந்த சித்தி ஆயுஷா, வியட்நாமைச் சேர்ந்த தோன் தி ஹுவாங் ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். வடகொரியாவைச் சேர்ந்த 4 பேரை தேடி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மலேசிய நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொலை சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற யூகங்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தோனேசிய பெண் சித்தி ஆயுஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திரும்பப்பெறுவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்காக காரணத்தை தெரிவிக்கவில்லை. இதையடுத்து சித்தி ஆயுஷா மீதான கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்வதாக நீதிபதி அறிவித்தார். தீர்ப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து சித்தி ஆயுஷா மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”நான் விடுதலையாகும் தகவல் இன்று காலையில் தான் எனக்கு தெரிந்தது. இது எனக்கு ஆச்சரியமாகவும், அதேசமயம் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்றார்.
இந்த வழக்கை சிறப்பாக நடத்தியதற்காக மலேசிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக, இந்தோனேசிய தூதர் கூறினார்.