இலங்கை அரச தூதுக்குழுவுடன் தாம் நடத்திய சந்திப்பின்போது கூறிய கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் மிஷெல் பச்சலெட் தெரிவித்துள்ளார்.
இலங்கை குறித்து ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் உள்ளடங்கியிருந்த தகவல்கள் சிலவற்றை ஏற்க முடியாதென ஆணையாளர் கூறியதுடன், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு உயர் அதிகாரிகளிடம் எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டாரென சுரேன் ராகவன் கூறியதாக கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த விபரங்கள் உண்மை அல்லவென ஆணையாளர் கூறியுள்ளார். ஒன்றில் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியதை நாளேடு தவறாகப் புரிந்திருக்கலாம், அல்லது தாம் கூறியதை ஆளுநர் தவறாகப் புரிந்திருக்கலாம், அல்லது தாம் கூறியதாகக் கூறித் தவறான கருத்தை ஆளுநர் கூறியிருக்கலாமென அறிக்கை ஒன்றில் மிஷெல் பச்சலெட் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் நடைமுறைகளை இலங்கை ஊடகங்கள் தொடர்ந்தும் தவறாக சித்திரிப்பதாக பச்சலெட் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை குறித்துத் தாம் சமர்ப்பித்த அறிக்கையின் வரைபு இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டு, அதற்கு இலங்கை வழங்கிய பதில் தமது அறிக்கையின் இறுதி வடிவத்தைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதெனவும், ஃபெப்ரவரியில் இலங்கை சென்ற தமது அதிகாரிகள் அரச அதிகாரிகளுடன் அறிக்கையை விரிவாக ஆராய்ந்தார்களனெவும் அவர் தெரிவித்துள்ளார்