அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லத் தீர்மானம் குறித்து தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகம் பாதிக்காத வகையிலான ஒரு முடிவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மேலும், வடக்கும் கிழக்கும் இணையும் என்பதில் கூட்டமைப்பு தொடர்ந்தும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் இதற்கு முஸ்லிம் தலைவர்களும் ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை தொடர்பாக முஸ்லிம் மக்களின் உணர்வுகள் பாதிக்காத வகையில் அவர்களின் இருப்புக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாதவாறு ஒரு தீர்மானத்தை மேற்கொள்வோம்.
ரிஷாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கான தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்.
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக தற்போது முஸ்லிம் மக்கள் உள்ள நிலையில் பேசுவது தவறு. ஆனால் அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு அவர்களிடம் இந்த விடயம் குறித்து நீதியான முறையில் நாங்கள் கலந்துரையாடுவோம்” என மேலும் தெரிவித்தார்.