திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு மக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை குறித்து ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
அமைச்சர் மனோ கணேசனின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நிலையில் இந்த கலந்துரையாடல் தொடர்பாக ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இதனை தெரிவித்தார்.
இதன்போது கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலய விவகாரம் உள்ளிட்ட தமிழ் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாக ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தின்போதே கன்னியாவில் வழமைபோல வழிபாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.