கச்சத்தீவு அருகே 2500த்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் புதனன்று விரட்டியடிக்கப்பட்டனர்.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசிடம் மீனவு அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலில், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வருடம் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகரித்து உள்ளது என தெரிவித்திருந்தது.
இவற்றில் கடந்த 14-ம் தேதி வரை 5 தாக்குதல் சம்பவங்களும், 44 கைது நடவடிக்கைகளும் நடந்துள்ளன. 14 மீனவர்கள் காயமடைந்து உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இதுவரை இலங்கை சிறையில் இருந்து 2,079 இந்திய மீனவர்கள் அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கச்சத்தீவு அருகே 500க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று 25,00க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் புதன் கிழமை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி வந்த இலங்கை கடற்படையினர் கப்பலில் இருந்த ராட்சத விளக்குகளை எரிய விட்டுள்ளனர்.
இதனால் மீனவர்கள் அச்சமடைந்தனர். தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளையும் கைக்கு கிடைத்தவரை அறுத்து வீசினார்கள். தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லை பகுதியை கடந்து வந்துள்ளனர் என்று கூறி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி விரட்டியடித்து உள்ளது. இதில் மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமடைந்தன. அதனால் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க முடியாது கரைக்குத் திரும்பினர். இத்தகவல்களை ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் பி.சேசு ராஜா தெரிவித்தார்.
ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ் கனி இந்தப் பிரச்சினையை மத்திய அரசுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும் என பி.சேசு ராஜா கேட்டுக் கொண்டார். தமிழக மீனவர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது குறித்து அத்திய அரசிடம் தெரிவிக்க வெண்டும் என குறிப்பிட்டார்.