கீழடி 6ஆவது கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இணைந்து செயற்படவுள்ளதாகவும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாகவும் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், இன்று (வெள்ளிக்கிழமை) மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், “கீழடி அடுத்தகட்ட ஆய்வை தொடங்கும் தருணம் நெருங்கி வருகிறது. அதற்காக சென்னையில் மூத்த பேராசிரியர் பிச்சை அப்பன் மற்றும் தலைமைச் செயலாளர் உதய சந்திரன் ஆகியோரை சந்தித்து கீழடியில் 6ஆம் கட்ட ஆய்வை உடனடியாக தொடங்க வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், கீழடி 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மாநில தொல்லியல் துறையுடன் இணைந்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசுடன் ஒரு மாத காலத்தினுள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளோம்.
இதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஷரூசா அமைப்பில் இருந்து முதல்கட்டமாக 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
குறித்த நிதி ஒதுக்கீட்டுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் அனுமதி கோரியுள்ளோம்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சில பொருட்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா எடுத்துச் சென்றுள்ளனர்.
இதன் மூலம் கீழடியின் தொன்மை, நாகரிகம், கலாச்சாரம் குறித்த ஹார்வார்டு பல்கலையின் முடிவுகள் வெகு விரைவாக அறிவிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.